பெரம்பலூரில், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் மேட்டூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (63). இவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாபுரம் கிராமத்திலிருந்து எசனைக்கு அரசுப் பேருந்தில் சென்றபோது அந்தப் பேருந்து கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றார். இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதாகக் கூறி, இழப்பீட்டுத் தொகை கேட்டு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், தியாகராஜனுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ. 90 ஆயிரம் வழங்க கடந்த 2012-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம், விபத்தில் பாதிக்கப்பட்ட தியாகராஜனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 1.68 லட்சம் வழங்க வேண்டுமெனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி- பெரம்பலூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், நீதிமன்ற ஊழியர்கள் புதன்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுச் சென்றனர்.