பெரம்பலூர் அருகே அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் மீது பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் முறையாகவும், கூடுதலாக நேரம் ஒதுக்கியும் அதிகளவில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜி. அங்கு அளித்த புகாரின்பேரில், அனுமதியின்றி சாலை மறியலில்
ஈடுபட்ட எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் சிவா (43), சுந்தரம் மகன் பொன்னுசாமி (59), முத்துசாமி மகன் சுந்தர்ராஜ் (27), வைத்திலிங்கம் மகன் தங்கராஜ் (65) உள்பட 54 பேர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.