பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை முகாமையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியும், பேச்சுப் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வாசிப்போம் யோசிப்போம், மொழி வளம் காப்போம், இளைய பாரதம் எழுகவே ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் 39 மாணவர்களும், கதை சொல்லுதல் போட்டியில் 78 மாணவர்களும் என மொத்தம் 117 பேர் பங்கேற்றனர். இப்போட்டிகளுக்கு ஆசிரியர்கள் ஆ. ராமர், காசிராஜன், குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
பேச்சுப் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த பா. ஹரிகரன் முதலிடமும், திம்மூர் கிராமத்தை சேர்ந்த பெ. தனசேகரன் 2 ஆம் இடமும், பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த செ. வர்த்தினி மூன்றாமிடமும் பெற்றனர்.
கதை சொல்லுதல் போட்டியில் 1 முதல் 5 வயதுக்குள்பட்ட பிரிவில் பாடாலூரை சேர்ந்த கோ. சாரதிராமன் முதலிடமும், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த ச. ராகேஷ் 2 ஆம் இடமும், எசனை கிராமத்தை சேர்ந்த ந. பிரியன் மூன்றாமிடமும், 6 முதல் 10 வயதுக்குள்பட்ட பிரிவில் துறைமங்கலத்தை சேர்ந்த அ. சையது பாத்திமா மிஸ்ரியா முதலிடமும், பூலாம்பாடியை சேர்ந்த க. ஹாலிதா பேகம் 2 ஆம் இடமும், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த ந. பிரசன்னா ராகவி மூன்றாமிடமும் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் சி. அசோகன் தலைமை வகித்தார். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நூலகத்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் பி. தயாளன்.
இதில், கோவை தனபால், நல்நூலகர் கோ. சேகர், ஓய்வு பெற்ற நல் நூலகர் கோபால் உள்பட மாணவ, மாணவிகள், வாசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட மைய முதல் நிலை நூலகர் இரா. சந்திரசேகரன் வரவேற்றார். மாவட்ட மைய 2 ஆம் நிலை நூலகர் ஆ. செல்வராஜ் நன்றி கூறினார்.