பெரம்பலூரில், திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247 மனுக்கள் பெறப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன் தலைமை வகித்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 247 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமர்சிங் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.