பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே குடிநீர் வசதி செய்துதரக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் கிராம
மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆழ்துளை கிணறு கடந்த சில நாள்களுக்கு முன் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனராம்.
இதனால், ஆத்திரமடைந்த அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள சுற்றுச்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தகவலறிந்த, ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. தயாளன், இளங்கோவன் மற்றும் போலீஸார் அங்குசென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே மறியல் விளக்கிக் கொள்ளப்படும் என பொதுமக்கள் உறுதிபடத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சாலையின் இருபுறமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை மாலை ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.