பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், ரூ.6.54 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வழங்கினார் .
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், 20 குதிரைத் திறன்கொண்ட 10 மினி டிராக்டருக்கு ரூ. 75 ஆயிரம் மானியம் வீதம், ரூ. 7.5 லட்சம் நிதியும், 8 குதிரை திறன்கொண்ட 19 பவர் டில்லருக்கு ரூ. 60 ஆயிரம் மானியம் வீதம் ரூ. 11.40 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த நாகராஜனுக்கு ரூ. 75 ஆயிரம் மானிய உதவியுடன் கூடிய ரூ. 3,15,809 மதிப்பிலான மினி டிராக்டரும், கீழப்பெரம்பலூரை சேர்ந்த நல்லப்பன், திருமாந்துறையை சேர்ந்த இந்திராகாந்தி ஆகியோருக்கு தலா ரூ. 59,400 மானிய உதவியுடன் கூடிய தலா ரூ. 1,69,320 மதிப்பிலான பவர் டில்லர் என மொத்தம் ரூ. 6,54,449 மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் இந்திரா, தோட்டக்கலை அலுவலர்கள் விஜயகான்டீபன், கனிமொழி, செல்வகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.