பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பிம்பலூர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (29). இவரும், அதே கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மகள் பிரேமாவும் (21) கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனராம். இந்நிலையில் கடந்த 2014-இல் பிரேமாவை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாராம். இதையறிந்த மணிகண்டனின் தாய் கருப்பாயி (65), சகோதரி அஞ்சலை (40), உறவினர் ஆறுமுகம் (45) ஆகியோர் மணிகண்டனுடன் இணைந்து பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, பிரேமா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மணிகண்டன் தனது சகோதரி காமாட்சி மகளான சரண்யாவை (16) திருமணம் செய்துகொண்டதும், அந்த பெண் 3 மாத கர்ப்பமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், திருமணம் செய்ததை மறைத்து, மற்றொரு இளம்பெண்ணை திருமணம் செய்து, அவரை பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், தொகையை செலுத்த தவறினால், மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற நபர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.