மாநில அளவிலான வாள் வீச்சு, தேசியளவிலான கால்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன்.
திருவண்ணாமலையில் சண்முக இண்டஸ்ட்ரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கம்புச் சண்டை மற்றும் வாள் வீச்சுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 25 மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில், வாள் வீச்சு, கம்புச் சண்டை போட்டியில் கல்லூரி மாணவர் சிவசூரியன் முதலிடம் பெற்றார்.
இதேபோல, இந்திய ஊரக விளையாட்டுக் கழகம் சார்பில் தேசியளவில் அதியமான் பொறியியல் கல்லூரியில் 7-வது தேசிய ஊரக விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 14 மாநிலங்களைச் சேர்ந்த அணி வீரர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர் த. தமிழரசன் முதலிடம் பெற்றார்.
மாநில, தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசளித்தார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன். கல்லூரி முதல்வர்கள் பாஸ்கர், சாந்தகுமாரி மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.