பெரம்பலூர் மாவட்டத்தில் கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நகர் மற்றும் பேரூர் பகுதிகளில் கோழி வளர்ப்புத் தொழில், வர்த்தக ரீதியான கோழிப்பண்ணைகள் மூலமாக பெருகியுள்ளது. இதை கருத்தில்கொண்டு, ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள், குறிப்பாக பெண்கள் பல காலமாக தங்களது புறக்கடைகளில் வளர்த்து அனுபவம் பெற்றுள்ள கோழி வளர்ப்புத்தொழிலை மேம்படுத்தி, அதன்மூலம் கிராம பொருளாதாரம் மேம்பட ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம், 50 சதவீத மத்திய மற்றும் 50 சதவீத மாநில அரசுகளின் பங்களிப்புடன் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 310 பெண் பயனாளிகளில், 250 பேர் பொது பிரிவினராகவும், 60 பேர் தாழ்த்தப்பட்டவராகவும் தேர்ந்தெடுத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவர் மூலம் ஒரு நாள் பயிற்சி அளிப்பதுடன் தலா ரூ. 50 வீதம், ரூ. 1,000 மதிப்பில் 4 வார வயதுடைய 20 நாட்டுரக கோழிகள் 100 சதவீதம் விலையில்லாமலும், கோழிகளுக்கான இரவு தங்கும் கொட்டில் அமைக்க பயனாளிகளுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும்.
இக்கோழிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மருத்துவ உதவி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய ஏழ்மையான வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த பெண் பயனாளிகள் தகுதியானவர்கள். மேலும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் முதிர்கன்னிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்களுடன், அருகேயுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.