தனியார் நிதி நிறுவனம் மோசடி:ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் வே. சாந்தாவிடம் வெள்ளிக்கிழமை மனு

தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் வே. சாந்தாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனு அளிக்க வந்த மலையாளப்பட்டி, அரும்பாவூர், பூலாம்பாடி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் கடந்த 2014-ல் கிளை அலுவலகம் தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் நியமிக்கப்பட்டு, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த உறுப்பினர்களிடமிருந்து மாதத் தவணையாக ரூ. 100 முதல் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. ஐந்தரை ஆண்டுகளில் செலுத்தப்பட்ட தொகைக்கு கூடுதல் வட்டி அல்லது அந்த தொகைக்கேற்ப நிலம் வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்ந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பெரம்பலூரில் செயல்பட்டு வந்த கிளை அலுவலகம் மூடப்பட்டது. எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. எனவே, தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுத்தர கோரியும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com