பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018- 19 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை,முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்னும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாகச் செலுத்தப்படும். புதியது மற்றும் புதுப்பித்தல் செப். 30 வரை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தங்களது அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி, அதனுடன் தங்களின் புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் சமர்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.