கஜா புயால் டெல்டா மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தலை நடத்த அவசரம் காட்டத் தேவையில்லை என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
தேவேந்திரகுல வேளாளர் இனத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து விலக்கி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை கிராம மக்களுடன் திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த பின்னர், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்திலும்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ்.சி.பிரிவிலிருந்து விலக்கி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சில சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் சாதிய பாகுபாடு பார்க்கும் அவலம் எனும் கரையிலிருந்து விடுபட வேண்டியது முக்கியம். அதனால், இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
தமிழகத்திலும், மத்தியிலும் எங்களுக்கு எந்தக் கட்சியுடனும் இணைக்கமும் இல்லை, பிணக்கும் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
20 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்த வேண்டும். இவ்விருத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராகி வருகிறோம். மத்தியில் பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் சிறப்பாக செயல்படுகின்றன என்றார் அவர்.