படைப்புழுக்களால் மகசூல் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சில்லக்குடி, பில்லாங்குளம், நெற்குணம், வெங்கலம், கீழப்புலியூர், எறையூர், புதுக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பங்கேற்க வந்து, ஆட்சியரகம் வந்து முற்றுகைப்போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது: தரமற்ற விதைகளை விற்பனை செய்து படைப்புழுகஈ தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் மகசூல் பாதிக்க காரணமான விதை உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களை வேளாண்துறையினர் முறையாக ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்திருந்தனர்.
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனுவில், அகரம் சீகூரில் ஓடும் பெரியாற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.