பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் தோட்டக்கலைக் கல்லூரிப் பேராசிரியர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சுந்தரபுரம் ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் சாமி அய்யப்பன் (58). இவர் திருச்சி நவலூர் குட்டப்பட்டு தோட்டக்கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இதே கல்லூரியில் பேராசிரியராக கருணாநிதி (54), உதவிப் பேராசிரியையாக ம. வித்யா (38) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் மூவரும் பெரம்பலூர் மாவட்டம், எசனை, அம்மாபாளையம் கிராமங்களில் நோய் பாதிப்புக்குள்ளான சின்ன வெங்காயப் பயிர்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட பின்னர், ஆலத்தூர் பகுதி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி- சென்னைதேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாமி அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கருணாநிதி, வித்யா, கார் ஓட்டுநரான துறைமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.