பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மக்காச்சோள அறுவடை இயந்திர வாகனம் தீயில் எரிந்து புதன்கிழமை நாசமானது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (35). இவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்து மக்காச்சோளப் பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த அறுவடை பணிகள் சேலம் மாவட்டம், வெள்ளையூரைச் சேர்ந்த முத்துசாமிக்கு (52) சொந்தமான மக்காச்சோளம் அறுவடை எந்திர வாகனத்தைக் கொண்டு நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரத்தை சேலம் மாவட்டம், நாவலூரைச் சேர்ந்த குமார் (34) இயக்கினார். புதன்கிழமை காலை வயலில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறிது நேரத்தில் அறுவடை இயந்திரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதையறிந்த குமார் வாகனத்தில் இருந்து தப்பியோடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அறுவடை எந்திரம் மற்றும் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.