தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயின்ற பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ஆம் நிலைக் காவலர், 2-ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 6,140 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் உடல்திறன் பயிற்சி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.