பெரம்பலூர் அரசுப் போக்குவரத்து பணிமனை எதிரே, கிளை மேலாளரின் நடவடிக்கையை கண்டித்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் டெப்போவை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு பல்வேறு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாள்களாக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளிக்கிழமை பணிக்கு சென்றனர். இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளையைச் சேர்ந்த 105 பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் பேருந்து நடத்துநர்கள் வசூலான தொகையை செலுத்துவதற்காக அலுவலகத்துக்கு வந்தபோது, கிளை மேலாளர் ராஜா, சனிக்கிழமை வரை பணிபுரிந்துவிட்டு, அந்தத் தொகையையும் செலுத்துமாறு தெரிவித்ததுடன், வசூல் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டி நடத்துநர்களை தரக்குறைவாக பேசினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், டெப்போவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கிளை மேலாளர் ராஜா சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
இதனால், சுமார் ஒரு மணி நேரம் டெப்போவிலிருந்து வெளியிலும், வெளியிலிருந்து டெப்போவிற்குள்ளும் பேருந்துகள் சென்று, வர முடியாத நிலை ஏற்பட்டது.