63-வது தேசியளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிகளை வியாழக்கிழமை பாராட்டி பரிசளித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்திய 63- வது தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள் ஹரியானா மாநிலத்தில் டிச. 12 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டியில், தமிழக அணி சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியைச் சேர்ந்த 3 தடகள மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், 19 வயதுக்குள்பட்ட மும்முறை தாண்டுதல் பிரிவில் என். நாகபிரியா வெண்கலமும், கே. பவானி 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் 6-வது இடமும், ஆர். கிருத்திகா 1,500 மீ ஓட்டப்போட்டியில் 6- வது இடமும் பெற்றனர். வெண்கலம் பெற்ற நாகப்பிரியாவுக்கு
தமிழக அரசு சார்பில் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜன. 8 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான ரிலையன்ஸ் பவுண்டேசன் இளையோர் தடகள போட்டியில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தடகள வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் 400 மீ ஓட்டத்தில் ஆரோக்கிய எபெசிய டெல்ஸி முதலிடமும், ஆர். சங்கீதா நீளம் தாண்டுதல் போட்டியில் 2 ஆம் இடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் 3 ஆம் இடமும், தன்யா, சிவஸ்ரீ, சங்கீதா, டெல்ஸி ஆகியோர் 400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கமும், 19 வயதுக்குள்பட்ட பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் என். நாகப்பிரியா தங்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலமும், ஆர். கிருத்திகா 800 மீ ஓட்டத்தில் தங்கமும், 1,500 மீ ஓட்டத்தில் வெள்ளியும், கே. பவானி 400 மீ மற்றும் 800 மீ ஓட்டத்தில் வெள்ளியும் பெற்றனர். முதலிடம் பெற்ற வீராங்கனைகள் தேசியளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாணவிகளை வியாழக்கிழமை பாராட்டி பரிசளித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க. கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.