பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் மஞ்சள் கிழங்கு, கரும்பு மற்றும் மாடுகளுக்கு அலங்கார பொருள்கள், பூஜைப் பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
பொங்கலுக்காக பொருள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். ஏழைகள் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட, தமிழக அரசு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2,87,260 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கலுக்கான கரும்பு, மஞ்சள் கிழங்கு, தேங்காய், பூ வகைகள், பழங்கள், மாடுகளுக்குத் தேவையான மூக்கணாங்கயிறு, சலங்கை, கொம்பு குப்பி, பல வகை வண்ணங்களில் பூச்சுக் கலவைகள் மற்றும் பூஜை பொருள்களை விற்பதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பெரம்பலூரில் குவிந்துள்ளனர்.
நகரின் பிரதான பகுதியான பழைய பேருந்து நிலையம், கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, புகர் பேருந்து நிலையம், கனரா வங்கி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தின் இரு பகுதிகளிலும் கரும்பு, மஞ்சள் கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
கடந்தாண்டை விட குறைவான விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இதேபோல, துணிக் கடைகளிலும் புத்தாடைகள் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்து நெரிசல்:
பெரம்பலூர் நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், பழைய மற்றும் புகர் பேருந்து நிலையங்கள், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, கடைவீதி உள்பட நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.