பெரம்பலூர் அருகே இளைஞரை அடித்துக் கொலை செய்த மற்றொரு இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 5 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் தேவா(21), ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராமச்சந்திரன்(21), குமுதன் மகன் கதிர்(24) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு பாளையம்- ரெங்கநாதபுரம் கிராமத்துக்கு இடையே உள்ள காட்டுப்பகுதியில் மதுபானம் அருந்தினர். அப்போது இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ராமச்சந்திரன் கிராமத்துக்குச் சென்று மேலும் 4 இளைஞர்களை அழைத்து வந்து தேவாவை கட்டையால் அடித்து விட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த தேவாவை அவரது குடும்பத்தினர் மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து, தேவாவை அடித்துக் கொலை செய்ததாக ராமச்சந்திரனைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.