பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான மக்காச்சோள கதிரடிக்கும் இயந்திரத்தை டிராக்டரில் இணைத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முருகேசன் (48) ஓட்டிவந்தார். ஞாயிற்றுக்கிழமை ரவிச்சந்திரனின் வயலில் மக்காச்சோள கதிர்களை பிரித்தெடுத்துவிட்டு, கதிரடிக்கும் இயந்திரத்துடன் டிராக்டரை இணைத்து முருகேசன் ஓட்டி வந்தார்.
அந்த இயந்திரத்தின் மீது கொளத்தூர் கிராமம், மேலத்தெருவைத் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி தமிழரசி (30), கிழக்குத் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சுதாதேவன் (30), வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரெங்கராஜ் (28) உள்பட சிலர் அமர்ந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது, கொளக்காநத்தம் - அணைப்பாடி சாலையில் உள்ள தாண்டராயன் கோயில் அருகே வந்தபோது, கதிரடிக்கும் இயந்திரம் சாலையில் கவிழ்ந்தது.
இதில், தமிழரசி, சுதாதேவன், ரெங்கராஜ் உள்ளிட்ட சிலர் பலத்த காயமடைந்தனர். கொளக்காநத்தம் வட்டார மருத்துவமனையில் முதலுதவி, பின்னர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழரசி, ரெங்கராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாதேவன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.