பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் கோ. கைவில்லியம் (85). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட இவர், பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெரம்பலூரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த கைவில்லியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த, அந்த நபர் மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, முதியவரின் உடலை மீட்டு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.