பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி என தனியாக தொடங்கப்பட்டுள்ளது என்றார் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியைப் பிரித்து அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி என தனியாக இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, மகளிர் உயர்நிலைப்பள்ளி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: 75 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இப்பள்ளியில், பெண்களுக்கென உயர்நிலைப் பள்ளி அமைக்க உத்தரவிட்ட அரசுக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பங்களிப்பாக ரூ. 50 ஆயிரமும், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினரான குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் ரூ. 50 ஆயிரமும் வழங்கி இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, விரைவில் பாடாலூரில் மாதிரிப் பள்ளி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும். மேலும் இப்பள்ளியின் மேம்பாட்டுக்காக ரூ. 5 லட்சத்தை வழங்க உள்ளேன் என்றார் அவர். விழாவில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ. புகழேந்தி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பெ. அம்பிகாபதி, வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ப. செந்தமிழ்ச்செல்வி உள்பட மாணவர்கள் பங்கேற்றனர்.