வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் வீ. ஞானசேகரன் தலைமை வகித்தார்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ப. காமராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர்கள் அ. ராஜேந்திரன், நா. தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் வி. ஜெயராமன் அறிக்கை வாசித்தார். சிரப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி, விவசாயிகள் தற்போதைய பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இம்மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து விதமான கடன்களையும், எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியச் செயலர்கள் க. காசிநாதன், கலியபெருமாள், ஆர். வேல்முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ந.கோ. கலைச்செல்வன், ஆ. தங்கவேல், க. அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்டப் பொருளாளர் கே. கோவிந்தன் நன்றி கூறினார்.