பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலான மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவு 9 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பரவலான மழை பெய்தது. தொடர்ந்து, நள்ளிரவு ஆங்காங்கே பலத்த மழையும், ஒருசில இடங்களில் பரவலான மழையும் பெய்தது. அதன்படி, செட்டிக்குளத்தில் அதிகபட்சமாக 96 மி.மீ மழை பெய்தது. பெரம்பலூரில் 18 மி.மீட்டரும், வேப்பந்தட்டையில் 2 மி.மீட்டரும், தழுதாழையில் 9 மி.மீட்டரும், பாடாலூர் பகுதியில் 31 மி.மீட்டரும் என மொத்தம் 156 மி.மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலை ஓரங்களிலும், வடிகால் வாய்க்கால்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பெய்த மழையால் குளிர் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, இந்த மழையைக்கொண்டு விவசாயிகள் சிலர் மானாவாரி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.