இலுப்பூர் கடைவீதியில் புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் அரசுப் பேருந்து சக்கரம் சிக்கிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டையிலிருந்து சனிக்கிழமை மதியம் சென்ற தமிழக அரசுப் போக்குவரத்து கழக பேருந்து இலுப்பூர் கடைவீதியின் குறுகலான சாலையில் சென்றபோது எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் மூடப்பட்டிருந்த சிமென்ட் தளத்தின் மீது பேருந்து ஏறியதால் மூடி உடைந்து அதன் சக்கரம் குழிக்குள் மாட்டிக்கொண்டது.
இதனால் பேருந்திலிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.