புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அங்குள்ள 3 கடைகள் மூடப்பட்டன. அதில், உள்கடை வீதியில் இருந்த ஒரு மதுக்கடையையும் மூடுமாறு அப்பகுதி மக்கள் ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், இதுதொடர்பாக போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகினர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஆக.10-ஆம் தேதிக்குள் மதுக்கடையை மூடிக்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
அதிகாரிகள் உறுதி அளித்தபடி மதுக்கடையை மூடாமல் வழக்கம்போல், வெள்ளிக்கிழமை கடை திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் டி. சலோமி தலைமையில் சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் கடை அருகே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுக்கடையை உடனே மூடுவதாக அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர்.