புதுக்கோட்டை அருகே உள்ள சிவபுரம் ஜெஜெ கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கிய தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.14) நிறைவடைந்தது.
புதுக்கோட்டை அருகே உள்ள ஜெ.ஜெ கலை, அறிவியல் கல்லூரியில், ஜோடோகான் இந்தியன் கராத்தே கழகத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை தொடங்கியது. போட்டியை திருமயம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ரகுபதி தொடக்கிவைத்தார். போட்டியில் தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து சுமார் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பங்கேற்கும் போட்டியாளர் வயது, எடை அடிப்படையில் 8 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த இந்தக் கராத்தே போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. இறுதிப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஜோடோகான் இந்தியன் கராத்தே கழகத்தின் தலைவர் எம். சாலமன், கற்பகவிநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன், வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பள்ளி தாளாளர் அமலா ஜோசப் உள்ளிட்டோர் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஜோடோகான் இந்தியன் கராத்தே கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.