ஜயங்கொண்டத்தில் போலீஸாரை கண்டித்து, இந்து முன்னணியினர் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் ஒன்று கிழிந்திருந்தது தொடர்பாக வெள்ளிக்கிழமை சிலர் தகறாறில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில் ஜயங்கொண்டம் போலீஸார் இதுதொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாவை கைது செய்தனர். இதையடுத்து ராஜாவை விடுதலை செய்ய கோரியும், போலீஸாரை கண்டித்தும் இந்து முன்னணியினர் ஜயங்கொண்டம் காவல் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.