இலுப்பூர் அருகே துக்க வீட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
இலுப்பூர் அருகேயுள்ள கீழ கோத்திராப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் கடந்த புதன்கிழமை இறந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை துக்க நிகழ்ச்சிக்காக உறவினர்கள் கொண்டு வந்திருந்த புதிய வேட்டியை கீழ கோத்திராப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (21) உடுத்தினாராம்.
இதில் ஆத்திரமடைந்த உறவினர்களான கீழ கோத்திராபட்டியைச் சேர்ந்த நடராஜன் (47), அவரது மகன் பாலு (18) ஆகிய இருவரும் அருண்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாள், கட்டையால் அவரைத் தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த அருண்குமார் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிந்த இலுப்பூர் போலீஸார் தந்தை, மகனைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.