மழைநீரைச் சேமிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்துவாரிகளையும் தூர்வார வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆலங்குடியில் அக்கட்சியின் ஒன்றியப் பொருளர் மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆலங்குடி பகுதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குடி போக்குவரத்துப் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். வீணாகும் மழைநீரை குளம், கண்மாய்களில் சேமிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்துவாரிகளையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலர் த. செங்கோடன், ஒன்றியச் செயலர் ஆர். சொர்ணக்குமார், துணைச் செயலர் செல்வராஜ், நல்லதம்பி உள்ளிட்டோர் பேசினர்.