அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் எதிரே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலி அரசுப் பணியிடங்களை உடனே நிரப்பக் கோரியும், மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுப் பணியிடங்களை அதிகரிக்கக்கோரியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை திரும்பப் பெற்றிடக்கோரியும், விஏஓ மற்றும் குரூப்-4 தேர்வுகளை தனித்தனியே நடத்தக்கோரியும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதை தடுத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம்.கே. ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் எஸ்.பழனியப்பன், ஒன்றியச்செயலாளர் கே.சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் உ.சிவாஜிகாந்தி நிறைவுரையாற்றினார். மாநில நிர்வாகக் குழு சி.பாலச்சந்தர், வழக்குரைஞர் மு.சசி, கே.தண்டபாணி, எஸ்.இளங்கோவன், டி.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.