கந்தர்வகோட்டை அருகே காட்டுப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சிய பெண் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கிராமத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்கப்படுவதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலால் அதிகாரி ஆர். ஜெயபாரதிக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, நடுப்பட்டி காட்டுப் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சிக் கொண்டிருந்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதம் (55), அதே ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் நடராஜன் (47), வீராச்சாமி மகன் செல்வமுருகன் (28) உள்பட 3 பேரையும் போலீஸார் உதவியுடன் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 7 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அலுமனிய பெரிய பானை, பிளாஸ்டிக் கேன் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.