புதுக்கோட்டை அருகே மணல் திருட்டைத் தடுத்த சகோதரர்கள் இருவரைக் கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகேயுள்ள செங்கலாக்குடி
பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன்கள் கார்த்திகேயன் (30), ராஜேஸ் (எ) மகேஷ்வரன் (24). சகோதரர்களான இருவரும், செங்கலாக்குடி பகுதியில் நடைபெற்ற மணல் திருட்டைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.மேலும், செங்கலாக்குடியைச் சேர்ந்த கே. ராஜேந்திரன் அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது குறித்து கார்த்திகேயன், ராஜேஷ் இருவரும் போலீஸார், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து மணல் திருட்டைத் தடுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரது தம்பி முத்தழகு, அவரது நண்பர்களோடு சேர்ந்து 4.10.2013-இல் கார்த்திகேயன், ராஜேஷ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து, மாத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து, ராஜேந்திரன்(33), அவரது தம்பி முத்தழகு (29), அதேபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நடராஜ்(32), கருப்பையா மகன் மூர்த்தி(32) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிங்ஸ்லி கிரிஸ்டோபர், கொலைக் குற்றத்தை உறுதிசெய்து 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.