அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சை அன்னை கம்சலை தொண்டு நிறுவனத்தின் கலைக்குழுவினரோடு புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் கோ.வசந்தராஜ்குமார் தலைமையில் முடநீக்கியல் வல்லுநர் ச.ஜெகன்முருகன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கிராம கலைநிகழ்ச்சிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் அதற்கு வழங்க வேண்டிய சான்றுகள், அளிக்கப்படும் உதவிகள், மாநில அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, மத்திய அரசு மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம் மற்றும் பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் சலுகைகள் குறித்து எளிய முறையில் விளக்கிக் கூறப்பட்டது.