பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டியும், மதுக்கடை அமைக்கும் முயற்சியைக் கைவிடக் கோரியும் புதுக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுகை மாவட்ட ஊராட்சிக்குழுவில் 9 ஆவது வார்டுக்குள்பட்ட மறவப்பட்டி கிராமத்தில் ஊராட்சிக்குழு உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சுந்தரம்பாள் சுப்பிரமணியன் கடந்த பல மாதங்களுக்கு முன் பேருந்து நிறுத்தம் அமைக்க ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இதுவரை பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை.
மேலும், மறவப்பட்டி அருகே மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிடக்கோரியும், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் அ. செந்தமிழ்குமார், காவல் ஆய்வாளர் பி. தமிழ்மாறன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.