புதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுகை மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (62). இவர், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கூலித்தொழிலாளியின் 7 வயது மகளை கடந்த 24.8.2015 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் புதுகை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்ததோடு, தமிழ்ச்செல்வனைக் கைது செய்து புதுகை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத்அலி, குற்றம்சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.