சுய தொழில்களால் முன்னேற வேண்டும்: மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுரை

மானியத்துடன் கூடிய கடனுதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

மானியத்துடன் கூடிய கடனுதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்டத் தொழில் மையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மானியத்துடன் கடனுதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பேசியது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கவும், மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பாரதப்பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெறக்கூடிய மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 சதவிகித வைப்புத்தொகை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவியாக 2016-17 ஆம் ஆண்டுக்கு 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் 4 லட்சம் கடனுதவிக்கான ரூ. 1.4 லட்சம் மானியத்தொகை, 1 பயனாளிக்கு ரூ. 5.8 லட்சம் கடனுதவிக்கான ரூ. 1.45 லட்சம் மானியத் தொகை மாவட்டத் தொழில்மையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தவேண்டிய 5 சத வைப்புத்தொகையில் ஒரு பயனாளிக்கு வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாவட்டத்தில் சீடு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் காது கேளாத சிறார்களுக்கான ஆரம்ப நிலைப்பயிற்சி மையம், மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோருக்கு மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பயிற்சி நிறுவனம் மூலம் குறுகிய காலத் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
மேலும், தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடனுதவித் தொகை பெறும் திட்டப் பயனாளி தங்கவேல் அம்மன் ஆடியோ சவுண்ட் சர்வீஸ் கடையைத் தொடங்கி 5 வேலையாட்களுடன் மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் லாபம் ஈட்டி வருவதாகவும், அதற்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார், தொழில்மைய உதவி இயக்குநர் எஸ். திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com