சுகாதார இயக்கம் மக்கள் இயக்கமாக வேண்டும் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார்.
புதுக்கோட்டையில் அறிவியல் தொழில்நுட்பம், வளர்ச்சி ஆய்வு மையம், சென்னை வி. ஏ. டெக் வாபாக் நிறுவனம் இணைந்து விராலிப்பட்டி சுகாதார இயக்கம் மூலம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடத்திய சுகாதாரக் கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது:
சுகாதார இயக்கம் வெற்றி பெற வேண்டுமெனில் அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். 80 சதவிகிதமான நோய்கள் அசுத்தமான நீரினால் பரவுவதாக மருததுவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் நீர் அசுத்தமாவதற்கு காரணம் மலக்கழிவு. மலக் கழிவு சரியாக அகற்றப்படாமல் நாம் பயன்படுத்தும் நீரோடு கலப்பதால் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. இதற்கு ஒரே தீர்வு அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும். இதற்கு மக்களிடையே மனமாற்றம் வர வேண்டும். அதை ஏற்படுத்தாமல் இது சாத்தியமில்லை. மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்த போதிய விழிப்புணர்வு, கல்வி அவசியம். அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னையாக உள்ளது. இதைப்போக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ. மணவாளன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் முகமது பிலால், சுகாதார இயக்கப் பயிற்சியாளர் ம. வீரமுத்து, சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் எல் பிரபாகரன் ஆகியோர் பேசினர்.
கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.எஸ். குமாரவேலன் முன்னிலை வகித்தார். சுகாதார இயக்க பயிற்சியாளர் கே ராதிகா நன்றி கூறினார். அனைவருக்கும் விழிப்புணர்வு நூல் வழங்கப்பட்டது.