பொன்னமராவதியில் ஆசிரியை தனது மொபெட்டில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் வெள்ளிக்கிழமை திருடுபோனது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ். உஷாராணி (30), ஆசிரியை. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள வாழைக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர் தனது கணவர் சுபக்கினுடன் வெள்ளிக்கிழமை பொன்னமராவதி மத்தியக் கூட்டுறவு வங்கியில் ரூ. 2.50 லட்சம் கடன் பெற்று, மொபெட் இருக்கையின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார்.
வங்கியிலிருந்து புதுப்பட்டி சென்ற இருவரும் அங்குள்ள கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு மொபெட்டை பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.