புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் நீடித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்தி அத்தொகுயின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் சு. கணேஷிடம் எம்எல்ஏ அளித்த மனு:
திருமயம் ஊராட்சியில் குப்பைகளும், கோழிக்கழிவுகளும் சாலை ஓரம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு, அந்தப் பகுதி மக்களுடைய சுகாதாரத்தை கெடுப்பதுடன் சுற்றுசூழலையும் பாதித்து வருகிறது.
மேலும், இந்தக் கழிவுகள் திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள வேங்கை கண்மாயில் கொட்டப்படுவதாலும், திருமயம் கடைவீதியில் உள்ள குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததாலும் மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது.
எனவே, இந்த நிலையை மாற்றும் வகையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மக்கும், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து கொட்ட வேண்டும். இதேபோல, திருமயம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் விநியோகிக்கப்படாமல் உள்ளதை கவனத்தில் கொண்டு, அவற்றை உடனடியாக விநியோகிக்க நடடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னமராவதி வட்டம், ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடநெருக்கடியை தவிர்ப்பதற்காக அரசின் சார்பில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
பொன்னமராவதி வட்டம், இலுப்பூர் கோட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, பொன்னமராவதி வட்டத்தை இலுப்பூர் கோட்டத்தில் இருந்து பிரித்து புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தோடு இணைக்க வேண்டும். பொன்னமராவதி- வேகுப்பட்டி- பூலாங்குறிச்சி- பொன். உசிலம்பட்டி வரையிலான 3.6 கிமீ பழுதடைந்த தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும்.