புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் ரூ. 21.58 கோடியில் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் சு. கணேஷ் திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமுக்குத் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது:
இந்த குறைகேட்பு முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டாவுக்காக 57 மனுக்கள், பட்டா மாறுதலுக்காக 32 மனுக்கள், புதிய குடும்ப அட்டைக்காக 12, காவல் துறை நடவடிக்கைக்காக 14, வேலைவாய்ப்புக் கோரி 11, பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டி 42, கல்வி உதவித்தொகை கோரி 5, முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகை கோரி 22, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 12, இதர கோரிக்கைக்காக 145 மனுக்கள் உள்பட மொத்தம் 352 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
தொடர்ந்து, மீன்வளத் துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோóவில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 13 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ. 38 ஆயிரம், உழவர் பாதுகாப்புத் திட்டம் மூலம் 2 பேருக்கு விபத்து நிவாரணத்தொகை தலா ரூ. 1 லட்சம், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 26 பேருக்கு ரூ. 87,223 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரிமளம், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த 685 பேருக்கு ரூ. 21.58 கோடியில் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, தனித் துணை ஆட்சியர் செல்வராஜ், உதவி இயக்குநர் செல்வமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) ஜெயபாரதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சதீஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் காளீஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சுலைமான்சேட், ஆஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.