புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மாமன்னர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளை கல்லூரிச் செயலர் நா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஏ. பழனிசாமி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இப்போட்டியில் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள்பட்ட புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி, மாமன்னர் அரசுக் கல்லூரி உள்ளிட்ட 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்ற புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜெ.ஜெ. கல்லூரி 2வது இடம் பெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் பிரிவுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.