புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சிப் பள்ளியில் கைகழுவும் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. புதுக்கோட்டைஅடப்பன்வயல் நகராட்சி துவக்கப் பள்ளியில் ரோட்டரி சங்கத் தலைவர் காசிராஜன் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் ரூ. 20 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட கை கழுவும் நிலையத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கா. குணசேகரன் திறந்து வைத்துப் பேசியது:
புதுக்கோட்டையிலேயே முதன் முறையாக கை கழுவும் நிலையம் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
இளங் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்பட முக்கியக் காரணம் கையில் சேரும் அழுக்குதான். எனவே குழந்தைகள் நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவி உணவு உட்கொள்வதன் மூலம் தங்களை நோயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். யுனிசெஃப் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் குழந்தைகள் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை முன்னிட்டு ரோட்டரி சங்கம் இதுபோல இன்னும் 4 நிலையங்களை அரசுப் பள்ளிகளில் அமைத்து தருவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
தலைமை ஆசிரியர் சுகந்தா வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செங்குட்டுவன், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் கருணாகரன், ரோட்டரி துணை ஆளுநர்கள் தங்கமணி, கனகராஜன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நைனார்முகமது, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஆர். சேவியர், பழ. முத்து, எம். சீனிவாசன், ஏகே ஹபிபுல்லாஆகியோர் வாழ்த்தினர். முன்னாள் பிரதமர் நேரு புகைப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ரோட்டரி செயலர் எஸ். இளங்கோ நன்றி கூறினார்.