புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தகோட்டை ஊராட்சி தோப்புபட்டியைச் சேர்ந்த எஸ். சின்னையா (40). விவசாயி. இவர், வெள்ளிக்கிழமை மாலை ஆலங்குடி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பியபோது, ஆயிப்பட்டி பிரிவு சாலை அருகே எதிரே வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி இறந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த சின்னையாவின் குடும்பத்துக்கு கல்லூரி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வீ.மெய்யநாதன் தலைமையில் அவரது உறவினர்கள் வம்பன் 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆலங்குடி போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்த பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்துசென்றனர்.