கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி செல்லாத, மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 5 முதல் 18 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லாத, இடைநின்ற, மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
முதல் நாளில் செங்கல் சூளை, தொழிலகங்கள், கல்குவாரிகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் இடைநின்ற
குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது.
கள ஆய்வுப் பணியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலெக்ஸாண்டர், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாசலம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் கு.பாஸ்கரன் செய்துள்ளார்.
பள்ளி செல்லாத, இடைநின்ற, மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்தால் 90470-28806, 97510-43685 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பொன்னமராவதி: அதேபோல, பொன்னமராவதி ஒன்றியத்திலும் இந்தப் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி பள்ளி செல்லாத, இடைநின்ற, மாற்றுத் திறன் குழந்தைகள், கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி அனைத்து குடியிருப்புகள், இதுதவிர, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பணி நடைபெற இருக்கிறது.
இத்திட்டத்தின்படி மைலாப்பூரில் உள்ள செங்கல் சூளையில் இந்தப் பணியை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே.ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ச.லதாதேவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆசிரிய பயிற்றுநர்கள் பரிசுத்தம், பச்சைமுத்து, மதனகுமார், சரவணன், சிறப்பாசிரியர்கள் தனலட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். இப்பணி வருகிற மே மாதம் 25ஆம் வரை நடைபெற உள்ளது.