அறந்தாங்கி அருகே ஆ.குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் புதன்கிழமை வேன் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி அருகே ஆ.குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, காசாவயல், தொண்டிககொல்லை, ஆ.குடிக்காடு, செட்டிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து பயின்று வந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் நடப்பாண்டில் ஒற்றை இலக்கத்தில் 9 மாணவ, மாணவிகள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த மாதம் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ரமணராஜா சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று முன்னாள் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் ரமணராஜா, காசாவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பையா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கென ஆம்னி வேன் வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் ரூ. 2.40 லட்சம் செலவில் பள்ளிக்கு வாகனம் வாங்க முடிவு செய்யப்பட்டது. முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்பையா உள்ளிட்ட பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் வேனின் சாவியை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.
மேலும் மாணவர்களுக்கு உடை, நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட 16 வகையான பொருள்களையும் வழங்கினர். மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீரக்குடி விஸ்வநாதன், வேட்டனூர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.