கந்தர்வகோட்டை அருகே பிசனாத்தூரில் புதன்கிழமை இரவு வீடுகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பீரோக்களை உடைத்து வயல்வெளியில் வீசிச்சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் கோயில் நகைகள் தப்பின.
கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெ. சின்னையன்(63). இவர், தனது மனைவியுடன் புதன்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு, வீட்டின் முன்புறம் உறங்கிக்கொண்டிருந்தார். இதையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கக் கதவினை உடைத்து உள்ளே சென்று அவரது சட்டையில் இருந்த ரூ. 5,500 -ஐ திருடிச் சென்றுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பீரோவை வீட்டின் பின்புறம் இருக்கும் காட்டுப் பகுதியில் வீசிச் சென்றுள்ளனர். இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் வீட்டில் புகுந்தும் பீரோவைத் தூக்கிச் சென்று அதில் இருந்த பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் (65) தற்போது சென்னையில் வசித்துவருகிறார். அவருக்குச் சொந்தமான வீட்டில் உள்ள லாக்கரில் பிசானத்தூர் திரௌபதி அம்மன் கோயில் தங்க நகைகள் இருந்தன. அவரது வீட்டில் இருந்த லாக்கரை மர்மநபர்கள் முயன்றும் உடைக்க முடியாததால் அதில் இருந்த கோயில் நகைகள் தப்பின . புகார்களின் பேரில், கந்தர்வகோட்டை போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.