"பொறியாளர்கள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சுப்பிரமணியன்.
புதுகை மாவட்டம், திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கை கணினி அறிவியல் துறை தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் குழ. முத்துராமு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியது:
ஒவ்வொரு பொறியாளரும் ஆய்வாளராய் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவேண்டும். இந்திய அரசு ஆராய்ச்சித் துறைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது. ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அதிகளவிலான தொகையை மத்திய அரசு உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனித இனத்தின் உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பது மருத்துவத் துறை தான் என்றாலும், அத்துறையில் வியத்தகு புரட்சிகளுக்கு பொறியியல் துறையின் பங்களிப்பும் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக செயற்கை உறுப்புகள் தயாரிப்பதில் பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. எனவே,பொறியாளர்கள் நம் சமூகத்தின் பொறுப்புமிக்க மனிதர்கள் என்பதை உணர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நம் உலகிற்கு வழங்க வேண்டும் என்றார்.
கருத்தரங்கில், பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில், புதுகை , சிவகங்கை, மதுரை, தஞ்சை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.