மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், சிவாலயங்களுக்கு பக்தர்கள் செவ்வாய்க்கிழமை நடைபயணமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆண்டுக்கு ஒரு முறை தேய்பிறை நாளன்று வரும் சதுர்த்தி திதி சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மகாசிவராத்திரி, மாசி மாத சதுர்த்தி திருநாளான செவ்வாய்க்கிழமை வருவதையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு 4 ஜாம பூஜைகள் நடைபெற்றன.
மாலை 6 மணிமுதல் 9 மணிவரை முதற் கால பூஜையும், இரவு 9 மணிமுதல் 12 மணிவரை 2 ஆம் கால பூஜையும், இரவு 12 மணிமுதல் 3 மணிவரை 3 ஆம் கால பூஜையும், அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.
அறந்தாங்கி அருகே கீழாநிலைக்கோட்டையில் உள்ள நெடுங்குடி கைலாசநாதர் ஆலயத்துக்கு பக்தர்கள் கடந்த 2 நாட்களாக காவடிகளைச் சுமந்தபடி நடைபயணமாக செல்கின்றனர். மகாசிவராத்திரி நாளான செவ்வாய்க்கிழமை ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி ஆலயம், விக்னேஷ்வர புரம் வால்முனீஸ்வரர் ஆலயம், காத்தாயி அம்மன் கோயில், அறந்தாங்கி ராஜேந்திரசோழீஸ்வரர் ஆலயம், அகரம் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. கந்தர்வகோட்டையில்....: கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில், ஸ்ரீ அங்கால பரமேஸ்வரி அம்மன் கோயில், துருசுப்பட்டி காளியம்மன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மாலை முதல் நான்கு கால பூஜைகள் நடைபெற்று, கோயில் வளாகத்தில் சொக்கநாதப்பட்டி சுப்பையாவின் ஆர்மோனிய பின்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி, செம்பனார் கோயில் சுகுமார் சேதுராமன் குழுவின் சிவபுராணச் சொற்பொழிவு மற்றும் தேவாரம், திருவாசகம் பாடல் நிகழ்வும் நடைபெற்றது. இதேபோல் கந்தர்வகோட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.